புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் பாகநாகாவில் ஜூன் 2ம் தேதி நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் உயிரிழப்பு 288ஆக அதிகரித்துள்ளது. கோரமண்டல், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள், சரக்கு ரயில் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. கடந்த 2 தேதி ஒடிசா மாநிலம் பாலசூர் பகுதியில் கொல்கத்தா சாலிமர்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூர்- ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மொத்தம் மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 270 பேர் பலியாகினர்; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சுமார் 190 உடல்கள் பாலாசோரில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான உடல்கள் அடையாளம் காணும் நிலையிலேயே இல்லை.
முன்பதிவு அற்ற பெட்டியில் பயணித்ததால் பெயர் உள்ளிட்ட விவரங்களும் இல்லை. என்ன செய்வது எனத்தெரியாமல் உறவினர்கள் தவித்து நிற்கின்றனர். இந்நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 288ஆக அதிகரித்திருக்கிறது. உயிரிழந்த 288 பேரில் 205 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாகநாகாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 83 பேர் யாரென்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் 40பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு:
ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பாகநாகா ரயில் நிலையத்தில் ரயில் விபத்து நடந்தபோது ரயில் பாதை மேல் செல்லும் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. என்ஜினுக்கு மின்சாரம் தரும் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் ஏராளமான பயணிகள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. மீட்கப்பட்ட உடல்களில் 40 பேரின் உடலில் எந்தக் காயமோ, ரத்தம் வந்ததற்கான தடயமோ காணப்படவில்லை. உடலில் மின்சாரம் பாய்ந்ததால்தான் எந்தவித காயமும் இன்றி 40 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.