பாலசோர்: ஒடிசா ரயில் விபத்தில் இறந்த ஒருவரின் உடலுக்கு 5 பேர் உரிமை கோருவதால், குடும்ப உறுப்பினர்களை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 288 பேர் பலியான நிலையில், 205 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணமுடியவில்லை. சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள், பிணவறைக்கு சென்று தங்களது உறவுகளின் சடலங்களை பார்வையிட்டு தேடி வருகின்றனர். பாலசோர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஒரு சடலத்திற்கு 5 பேர் உரிமை கோரி உள்ளனர்.
அதனால் அவர்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்து முகமது இனாம்-உல்-ஹக் என்பவர் கூறுகையில், ‘எனது உறவினரின் உடலுக்கு உரிமை கோரிய போது, அதே உடலுக்கு மேலும் சிலர் உரிமை கோரியுள்ளனர். அதனால் என்னை டிஎன்ஏ மாதிரி சோதனை உட்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரியுள்ளேன்’ என்றார்.