பொன்னேரி: உலக கடல்வள தினத்தை முன்னிட்டு, பழவேற்காடு கடற்கரையில் தூய்மை பணி நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடற்கரையில் நேற்று காலை உலக கடல்வள தினத்தை முன்னிட்டு, பொன்னேரி மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவ-மாணவிகள் லைட்ஹவுஸ் பகுதியில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிக்கு மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் டாக்டர் ஜெயசகிலா தலைமை தாங்கினார். பொன்னேரி மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன் இப்பணியை துவக்கி வைத்தார்.
லைட்ஹவுஸ் கடற்கரை பகுதியில் தூய்மை பணி நிறைவு பெற்ற பிறகு, தோணிரேவு மீனவ கிராமத்தில் உள்ள பழவேற்காடு பண்ணை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், முன்நெகிழி பயன்பாட்டினால் கடற்கரையில் ஏற்படக்கூடிய சீர்கேட்டை பற்றியும், கடல் வளத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்தும் மீனவ மக்களிடையே விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில், கல்லூரி உதவி பேராசிரியர்கள், லைட்ஹவுஸ் ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன், மீனவர் கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர், நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.