அம்பத்தூர்: ஓசியில் சிக்கன் பக்கோடா தர மறுத்த கடைக்காரரை கத்தியால் குத்திய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். சென்னை பாடி குமரன் நகர் பகுதியில் சிக்கன் பக்கோடா கடை நடத்தி வருபவர் சிவா (31). இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை தனது கடையில் சிக்கன் பக்கோடா செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது அங்கு மது போதையில் வந்த நபர், சிவாவிடம் சிக்கன் பக்கோடாவை கடனாக தருமாறு கேட்டு வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிவா கடனாக தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த போதை ஆசாமி, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சிவாவின் கழுத்தில் பலமாக குத்தி கிழித்துள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிவாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கொரட்டூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தினார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சிவாவை தாக்கியது அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (24) என்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து நேற்று குடிபோதையில் சாலையில் சுற்றிக் கொண்டிருந்த உதயகுமாரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.