*கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் போராட்டம்
திருவண்ணாமலை : செய்யாறு பகுதியில், மேல்மா சிப்காட் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடக்கோரி கிராம மக்கள் விளைபொருட்களுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று நடந்தது, அதில், கூடுதல் கலெக்டர் ரிஷப், டிஆர்ஓ பிரியதர்ஷினி, ஆர்டிஓ மந்தாகினி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அதில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, பட்டா மாற்றம், சுயதொழில் கடனுதவி, வேலைவாய்்ப்பு உள்ளிட்ட பல்வேறு ேகாரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 450க்கும் மேற்பட்டோர மனுக்களை அளித்தனர். அதேபோல், பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட ேகாரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். கலெக்டர் அலுவலக தரைதளத்துக்கு வந்து மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதன்மீது உடனடி நடவடிக்கை எடுத்து உதவிகள் வழங்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், செய்யாறு அருகே அனக்காவூர் ஒன்றியத்தில் மேல்மா சிப்காட் தொடங்குவதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, மேல்மா சிப்காட் அமைக்க சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை தரிசு நிலங்கள் என தெரிவித்து, அவற்றை கையகப்படுத்த அதிகாரிகள் முயற்சிப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அந்த பகுதியில் விளையும் மணிலா, கம்பு, கரும்பு, மிளகாய், காய்கறிகள் உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களை கொண்டுவந்து, அவற்றை கீழே வீசியெறிந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும், நிலங்களை கையகப்படுத்த தொடர்ந்து முயற்சித்தால், தங்களுடைய ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்கப் போவதாக தெரிவித்தனர்.
பின்னர், தங்களுடைய ேகாரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர். விவசாயிகளின் இந்த திடீர் போராட்டத்தா்ல், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதையொட்டி, டிஎஸ்பிக்கள் குணசேகரன், அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும், செங்கம் தாலுகா ஜப்திகாரியந்தல் பகுதியில் ஆற்று மணலை சட்டவிரோதமாக எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மனு அளித்தனர். மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், திடீரென தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க, கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டிருந்தது. பொதுமக்கள் கொண்டுசென்ற பை உள்ளிட்ட பொருட்களை சோதித்த பிறகே அனுமதித்தனர்.