சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேல் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருபவர்களுக்கு பதிவுறு எழுத்தராக பதவி உயர்வு வழங்கப்படும் என சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து சமூக நலத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சத்துணவு திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு, சமூகநலத்துறையின் கீழ் பதிவுறு எழுத்தர் பதவியில் நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விருப்ப கடிதம் பெற்று வழங்க வேண்டும். இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்களிடமிருந்து விருப்ப கடிதம் மற்றும் பெயர், கல்வி தகுதி, பணிவரலாறு, தண்டனை பெற்றுள்ளவரா உள்ளிட்ட தகவல்களை கொண்டு படிவத்தினை பூர்த்தி செய்து பெயர் பட்டியலை சமூக நலத்துறை ஆணையகரத்துக்கு ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் அனுப்பிட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர்களுக்கும், சென்னை மாநகராட்சி கூடுதல் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சமுக நல ஆணையர் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.