Saturday, May 11, 2024
Home » போதை பொருள், கடத்தல் விற்பனை குறித்து புகார் அளிக்க வாட்ஸ்அப் செல்போன் எண் அறிவிப்பு: தகவல் தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி, மாவட்ட எஸ்பி தகவல்

போதை பொருள், கடத்தல் விற்பனை குறித்து புகார் அளிக்க வாட்ஸ்அப் செல்போன் எண் அறிவிப்பு: தகவல் தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி, மாவட்ட எஸ்பி தகவல்

by Ranjith

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்துபவர் பற்றியோ விற்பனை குறித்தோ தகவல் தெரிவிக்க வாட்ஸ்அப் மற்றும் இலவச செல்போன் எண்களை மாவட்ட எஸ்பி அறிவித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை உட்கோட்டத்தில் உள்ள 22 காவல் நிலையங்கள் உள்ளன. தமிழக – ஆந்திர மாநில எல்லையோரம் திருவள்ளூர் மாவட்டம் இருப்பதால் கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருட்கள் எளிதில் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. வாகன சோதனை, கடைகளில் ஆய்வு நடத்தி போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, கடத்தலில் ஈடுபடுபவர்களும் கைது செய்யப்படுகின்றனர். இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்பியாக தற்போது பொறுப்பேற்றுள்ள சீனிவாசப் பெருமாள் அவர்களின் போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற திட்டத்தின் அடிப்படையில் திருவள்ளூர் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சினிமா திரையரங்கம், ரயில் நிலையம் அருகில் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

100க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனரில் சட்ட விரோதமான மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்களை ஒழிக்க இணைந்து போராடுவோம் என்றும், கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடத்தி வருபவர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்: 10581, வாட்ஸ்அப் எண்: 94984 10581, திருவள்ளூர் மாவட்ட வாட்ஸ்அப் எண் 63799 04848 என்ற எண்களில் சரியான தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதிகள் தரப்படும் என்றும் தகவல் அளிப்போர் ரகசியம் காக்கப்படும் என்றும் திருவள்ளூர் எஸ்பி சீனிவாசப் பெருமாள் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

20 − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi