சியோல்: தென்கொரிய கடல்பகுதியில் வடகொரியா பல ஏவுகணை வீசி சோதனை நடத்தியிருப்பது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. வடகொரியா தென்கொரியா நாடுகளின் நீண்டநாள் மோதலால் கொரிய தீபகற்பத்தில் எப்போதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. தென்கொரியாவுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் இணைந்து கூட்டு ராணுவ போர் பயிற்சிகளை நடத்துவது, தென்கொரியாவில் அமெரிக்காவின் குண்டு வீசும் விமானங்கள், அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் போன்ற சக்தி வாய்ந்த ராணுவ தளவாடங்கள் நிறுத்தி வைப்பு போன்ற நடவடிக்கைகள் வடகொரியாவை எரிச்சலடைய வைத்துள்ளது.
இதனால் வடகொரியா குறுகிய ஏவுகணை சோதனை, கண்டம் விட்டு கண்டம் தாவும் நீண்டதூர ஏவுகணை சோதனை, நீருக்கடியில் கதிரியக்க சுனாமிகளை உருவாக்கி அணு ஆயுத இலக்குகளை அழிக்கும் புதிய டிரோன் சோதனைகளை செய்து வருகிறது. நேற்றும் தென்கொரிய கடல்பகுதியில் ஏவுகணைகளை ஏவி வடகொரியா நடத்திய தாக்குதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் நடத்தப்பட்ட 3ம் முறையாக ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக வட கொரியா அறிவித்துள்ளது.