உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு ஒரு தளம் முழுவதும் சேதமடைந்த பரபரப்பு காட்சி வெளியாகியுள்ளது. கிரேட்டர் நொய்டாவின் மேற்கு பகுதியில் உள்ள கௌசிட்டி என்ற வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் வரிசையாக உள்ளன. இங்குள்ள ஒரு குடியிருப்பில் இரண்டாவது தள வீட்டில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டு அருகே இருந்த மற்றொரு வீட்டிற்கும் மளமளவென பரவியது.
இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதற்கட்ட தகவலில் ஆளில்லாத குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியாததால் அது குறித்து விசாரணை நடைபெறுகிறது.