சென்னை: நொச்சிக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை நொச்சிக்குப்பத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம் பற்றி பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மீனவர்களின் கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். தெரிவித்தார். மீனவர்கள் தொழில் செய்ய மெரினா லூப் சாலையை பயன்படுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
பின்னர் நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம் தொடர்பாக பேரவையில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தன. லூப் சாலையில் மீன் கடைகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டாலும் மீனவர் நலனுக்காக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது, இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
மீனவர்களுடன் 4 மணி நேரம் பேசியுள்ளோம் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல் தெரிவித்தார். ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்ததன் அடிப்படையில் எடுக்கப்பட்ட சிறிய அளவிலான நடவடிக்கை இது எனவும், மீனவர்கள் தொடர்பான பிரச்சனை இன்று காலையோடு முடிவுக்கு வந்துவிட்டது என்றும் அவர் கூறினார். முதலமைச்சரால் மீன்கடை பிரச்சனைக்கு நல்ல முடிவு காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.