ஸ்டாக்ஹோம்: நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஜான் போஸூக்கு இந்தாண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த ஆல்ப்ரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி என ஆறு துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 2ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஜான் போஸூக்கு இலக்கிய துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. சொல்ல முடியாதவற்றுக்காக குரல் கொடுக்கும் அவரது புதுமையான நாடகங்கள், உரைநடைகளுக்காக இப்பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நார்வேஜியன் மொழியில் எழுதப்பட்ட இவரது நாடகங்கள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்புகள் மகத்தானவை.