திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இதுவரை மொத்தம் 6 பேருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2 பேர் மரணமடைந்துள்ளனர். நிபா வைரஸ் பாதித்தவர்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்பில் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நோயாளிகளுடன் மிகவும் நெருங்கிப் பழகியவர்களின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கூடுதலாக ஒருவாரம் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வலை விரித்து 2 வவ்வால்கள் பிடிக்கப்பட்டு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன.