நீலகிரி: முதுமலை புலிகள் சரணாலயத்தில் நோய்வாய்ப்பட்ட இளம் யானையை உயிர்ப்பிக்க கடுமையாக உழைத்த குழுவினருக்கு சுப்ரியா சாஹு ஐஏஎஸ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உணவு தண்ணீர் தேடி அலைந்த போது மயக்கமடைந்து விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் காப்பாற்றினர். நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை சுற்றுவட்டார வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீர் தேடி 6 வயது யானை குட்டி ஒன்று மசினகுடி அருகே உள்ள தனியார் பள்ளி அருகே வந்தது.
View this post on Instagram
மிகவும் சோர்வாக இருந்த யானை வெப்பம் தாளாமல் திடீரென நடக்கமுடியாமல் மயங்கி விழுந்துள்ளது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானையை பரிசோதித்ததில் அது நீர்சத்து குறைவால் மயங்கி விழுந்திருப்பது தெரியவந்தது. இதை அடுத்து யானைக்கு நீர்சத்து நிறைந்த உணவுகள் பால் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை வழங்கி அதன் உடல் நிலையை அவர்கள் கண்காணித்து வந்தனர். சுமார் 3 மணி நேரம் மயக்கநிலையிலேயே இருந்த யானை பின்னர் தடுமாற்றத்துடன் எழுந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.