ஊட்டி: நீலகிரியில் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர். நீலகிரி மாவட்டத்தில் நிர்ணயித்த தூரத்தை விட அதிக தூரம் ஆட்டோக்கள் இயக்குவதை தடுக்க வேண்டும். மேலும் சமவெளி பகுதிகளில் இருந்து பேக்கேஜ் முறையில் சுற்றுலா பயணிகளை ஊட்டிக்கு அழைத்து வரும் தனியார் கால் டாக்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
சொந்த பயன்பாட்டுக்காக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாடகைக்கு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.சுற்றுலா வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் காவல்துறையினர் அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும். சுற்றுலா வாகன ஓட்டுனர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு மனு வழங்கி உள்ள நிலையிலும், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஊட்டி ஏடிசி பகுதியில் தலைவர் கோவர்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வாடகை வாகனங்களில் சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.