நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தி என்ற இடத்திற்கு சென்ற அரசு பேருந்தை யானைகள் கூட்டமாக வழிமறித்ததால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டம் முழுவதும் உள்ள வனப்பகுதியில் பச்சை பசேலென்று காட்சியளிக்கின்றன. இதனால் கேரளா வனப்பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் காட்டு யானைகள் நீலகிரி நோக்கி படையெடுத்துள்ளன.
அட்டப்பாடியை ஒட்டி உள்ள வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதி எல்லையில் அமைந்துள்ள கெத்தை மலை பாதைக்கு 4 குட்டிகளுடன் 10 காட்டு யானைகள் வந்துள்ளன. அவ்வாறு முகாமிட்டுள்ள காட்டு யானைகள் அவ்வப்போது மஞ்சூர், கெத்தை மலை பாதையில் உலா வருகின்றன. அவ்வாறு மஞ்சூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தை 4 குட்டிகளுடன் இருந்த காட்டு யானைகள் வழிமறித்தன.
இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மஞ்சூர், கோவை இடையே போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது. இந்த பரபரப்பு காட்சிகளை பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்துடன் பதிவு செய்துள்ளார் அதே போல சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலை கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு நிலவியது. அங்கும் இங்கும் சுற்றிய யானை உங்கள்வாடி கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அப்போது நாய்கள் மற்றும் பொதுமக்கள் யானையை விரட்டியதால் ஆத்திரமடைந்து வீடுகளுக்குள் புகுந்து மீண்டும் பழைய ஆசனூர் கிராமத்தை நோக்கி சென்றது. பட்டாசு வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.