நீலகிரி: நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 26-ம் தேதி சத்தியமங்கலம் அருகே தனியார் பள்ளியில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்தது. தேர்தல் அலுவலர் அளித்த புகாரில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயில் கடந்த 26ம் தேதி குண்டம் விழா நடைபெற்றது. இதில், ஒன்றிய அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் பாஜ வேட்பாளருமான எல்.முருகன் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தார். பின்னர், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜவினருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்திற்கு முறையாக அனுமதி பெறவில்லை. இதுகுறித்து பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் பாஜ வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே தேர்தல் விதிமுறைகளை மீறியதால் எல் முருகன் மீது 2 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், நேற்று முன்தினம் பெருந்துறையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெறாததால், பறக்கும்படையினர் அளித்த புகாரின் பேரில் சென்னிமலை ஒன்றிய அதிமுக செயலாளர் ராமசாமி மீது பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் வசந்தராஜன் நேற்று கிணத்துக்கடவு பகுதிக்குட்பட்ட கோணவாய்க்கால் பாளையத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறி ஏராளமான பைக் மற்றும் வாகனங்களில் ஒன்று கூடி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததால் வசந்தராஜன், பாஜ நிர்வாகிகள் ஜான்சன், பிரகாஷ், உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.