உலகம் முழுவதுமே கடலோரம் இருக்கிற ஊர்களில் கிடைக்கும் உணவுகள் விசேஷமாகவும் தனிக்கலாச்சாரம் உடையதாகவும் இருக்கும். நிறைய காய்கறிகளை கொண்ட உணவு, வெளிநாட்டு உணவுகள் என எதையுமே இந்த கடலோரம் வசிக்கும் மக்கள் விரும்ப மாட்டார்கள். கடலில் இருந்து கிடைக்கும் பல வகையான மீன்களையும் அந்தப் பகுதியில் கிடைக்கும் பொருட்களை வைத்துமே சமைத்துச் சாப்பிடக் கூடியவர்கள். இந்தியாவின் கடலோரத் தீவுகளில் அந்தமான் நிக்கோபர் தீவுகளுமே முக்கியமானது. சுற்றியும் இருக்கிற நீருக்கு நடுவே அந்தப் பகுதி மக்கள் என்ன மாதிரியான உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள் மற்றும் அந்த தீவுக்கு சுற்றுலாவுக்கு வருகிறவர்கள் எந்த உணவுகளை விரும்புகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்வோம்.
மீன் குழம்பு
உலகம் முழுவதுமே மீன் குழம்பிற்கு அடிமையானவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களால் கடற்கரையோரம் சமைக்கப்படுகிற மீன் குழம்பை ஒருபோதும் சமைக்க முடியாது. அதற்கு காரணம் அந்தப் பகுதியில், அந்த தீவில் கிடைக்கிற தூய்மையான பதப்படுத்தப்படாத மீன்கள்தான். அதுமட்டுமில்லாமல், கடலோர கிராமங்களில் குறிப்பாக நிக்கோபர் மாதிரியான தீவுகளில் கிடைக்கும் மீன் குழம்புகள் தனிச்சுவையில் இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் குழம்பிற்கு தேர்ந்தெடுக்கிற மசாலாதான். பெருஞ்சீரகம், மிளகுத்தூள் மற்றும் நாட்டு மசாலாப் பொருட்களால் சமைக்கப்பட்டு கூடவே கறிவேப்பிலையின் நறுமணமும் தக்காளியின் புளிப்பும் சேர்ந்து குழம்பின் சுவையை சொர்க்கத்திற்கே கொண்டு சென்றுவிடும். இந்த மீன்குழம்பை சுற்றுலாவுக்கு வருகிற பயணிகள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
சிக்கன் டிக்கா மசாலா
சிக்கன் டிக்கா மசாலா பிரிட்டிஷ் தேசிய உணவாகும். இந்திய மசாலாப் பொருட்களைச் கூடுதலாக சேர்த்து சமைப்பதன் மூலம் வெளிநாடுகளில் இருக்கும் சுவையை விட இங்கு புதுமாதிரியான சுவையில் கிடைக்கிறது. பல்வேறு மசாலாக்கள் அத்துடன் தயிர் ஆகியவற்றைச் சேர்த்து கோழியை மென்மையானதாக்கி, பிறகு அடுப்பில் சுட்டு தருகிறார்கள். நிக்கோபர் தீவின் குளிர்க் காற்றுக்கு இதமாக இந்த மாதிரி சூடான சிக்கன் சாப்பிடுவது அங்கு வருகிற சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது.
தேங்காய் இறால் குழம்பு
மற்ற இந்திய ரெசிபிகளைப் போலல்லாமல் இது உண்மையிலேயே மிகவும் சுவை கொண்டது. ஏனெனில், இந்த உணவை தயாரிப்பதற்கு சேர்க்கப்படுகிற மசாலாக்கள் கொஞ்சம் கூடுதல் காரத்தன்மையோடு இருப்பதால் சுவை அள்ளும். அதே நேரத்தில் அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவாகவும் இருக்கிறது. நிக்கோபர்க்கு வருகிற பயணிகள் கடற்கரை ஓரங்களில் அமர்ந்தபடி சூடான சோற்றோடு இந்தக் குழம்பை ஊற்றிச் சாப்பிட்டு கொண்டாட்டத்தோடு வீடு திரும்புகின்றனர்.
ஃபிஷ் தந்தூரி
கடற்கரை ஓரங்களில் மீனைச் சுட்டு சாப்பிடுவது வழக்கம். உலகம் முழுவதுமே இறைச்சிகள் அனைத்துமே முதலில் சுட்டுதான் சாப்பிடப்பட்டது. கண்டுபிடிப்புகள் அதிகமானதும் சமைக்கும் முறையும் மாறி இருக்கிறது. ஆனால், இப்போது எல்லா இறைச்சியையும் தந்தூரி என்ற பெயரில் சுட்டுச் சாப்பிடும் வழக்கம் வந்திருக்கிறது. அந்த வகையில் நிக்கோபர் தீவில் மீன்களை சுட்டுச் சாப்பிடும் வழக்கம் அதாவது ஃபிஷ் தந்தூரி என்கிற உணவு அதிகமாக சாப்பிடப்படுகிறது.
கணவாய் பொரியல்
ஆக்டோபஸ் எனப்படும் கணவாய்கள் கடல் உணவுப் பிரியர்களுக்கு பிடித்த உணவாகும். மிகவும் மென்மையான கடல் உணவுகளில் இந்த கணவாயும் ஒன்று. இந்த கணவாய் மீன் குழம்பு வைப்பதற்கு ஏற்றதாக இருந்தாலும் பொரியல் செய்து சாப்பிடும்போது கூடுதல் சுவையில் இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த டிஷ்சை கடற்கரையோர மக்கள் விரும்பி சமைக்கிறார்கள்.
அமிர்தசாரி குல்சா
அமிர்தசாரி குல்சா என்பது பஞ்சாப் ஸ்பெஷல் உணவாகும். சாப்பிடுவதற்கு சப்பாத்தி போல இருந்தாலும் இது சப்பாத்தி கிடையாது. இந்த குல்சாவுக்கு உள்ளே வெங்காயம், உருளைக்கிழங்கு, பட்டாணி மற்றும் பருப்பு ஆகியவற்றை உள்ளே வைத்து ரொட்டி போல சுட்டுத் தருகிறார்கள். பலருக்கும் பிடித்த உணவு அதே நேரம் இதை சைவத்துடனும் அசைவத்துடனும் சேர்ந்தே சாப்பிடலாம். நிக்கோபர்க்கு வருகிற சைவப் பிரியர்கள் இந்த உணவை தேர்ந்தெடுக்கிறார்கள். இதோடு பட்டரையும் சேர்த்து கிரேவி செய்து சாப்பிடுகிறார்கள்.
இந்திய உணவு
இந்தியாவில் கிடைக்கிற மிகச்சிறந்த உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டுமென்றால் தாழி உணவு மிகவும் சிறந்த ஒன்று. அதாவது, தீவுக்கு வரக்கூடிய வெளிநாட்டுப் பயணிகள், கடற்கரையைப் பார்த்துக் கொண்டே இந்தியாவில் கிடைக்கக்கூடிய அனைத்து வகையான ஸ்பெஷல் உணவுகளையும் சாப்பிட வேண்டுமென்றால் இந்த தாழி உணவை தேர்ந்தெடுக்கிறார்கள். அதாவது, இந்த தாழி உணவு என்பது ஒரு மிகப்பெரிய வட்டமான பாத்திரத்தில் பலவகையான உணவுகளை ஒன்றாக வைத்து சாப்பிடக் கொடுப்பதுதான். இந்த உணவில் எல்லா மாநில உணவுகளும் இருக்கும். ஒரே நேரத்தில் குடும்பத்தோடு அமர்ந்து அனைத்து ஊர் உணவுகளையும் சாப்பிட்டு மகிழ இந்த உணவு சிறந்தாக இருக்கிறது. – அதி