சென்னை: என்.ஐ.ஏ. விளக்கத்தை கேட்காமல் மதுரை வழக்கறிஞர் முகமது அப்பாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகவும், தடை செய்யப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினுடைய நிர்வாகிகள் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த என்.ஐ.ஏ. மேல் விசாரணைக்கு அனுமதி கோரி மனுதாக்கல் செய்திருந்தது. அந்த மனு நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது அப்பாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, பி.எஃப்.ஐ. அமைப்பு நிர்வாகிகள் மீது என்.ஐ.ஏ. பதிந்த வழக்கில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு தடை கோரியும் வழக்கறிஞர் முகமது அப்பாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் புகழேந்தி மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, என்.ஐ.ஏ.வுக்கு எதிராக முகநூலில் சில கருத்துக்களை தெரிவித்ததற்காகவும், குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜரானதற்காகவும் வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று முகமது அப்பாஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. போதுமான ஆதாரங்கள் கிடைத்ததால் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆதாரங்கள் குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக என்.ஐ.ஏ. தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மேல் விசாரணைக்கு அனுமதி கோரிய மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் முன், அரிவாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் நீதிமன்றம் தீவிரமாக கருதும் எனவும் கடுமையாக எச்சரிக்கை விடுத்தனர். மேலும் என்.ஐ.ஏ. தரப்பு விளக்கத்தை கேட்காமல் மதுரை வழக்கறிஞர் முகமது அப்பாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், மனு மீது பதில் அளிக்கும்படி என்.ஐ.ஏ.க்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.