சென்னை: கல்வி வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் தினகரன் நாளிதழ் கல்வி கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தினகரன் நாளிதழ் மற்றும் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சியை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது: தமிழ்கத்தில் உயர்கல்வி சிறப்பாக இருக்க திராவிட மாடல் ஆட்சி தான் காரணம், அதனால் தான் தமிழ்நாடு உயர்கல்வியில் முதல் மாநிலமாக சிறந்து விளங்குகிறது. நான் முதல்வன் திட்டம் மூலம் படிப்பு மட்டும் இல்லாமல் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கபடுகிறது. நடப்பு கல்வி ஆண்டு முதல் மாணவர்களுக்கும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.
மாணவர்களுக்கு தமிழ் மொழியும் வேண்டும் ஆங்கில மொழியும் வேண்டும் இரு மொழிக் கொள்கைதான் பின்பற்ற வேண்டும் அதுதான் கல்விக்கு சிறந்ததாக இருக்கும். தனியார் கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளில் தமிழ் வழியில் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும். கல்வி வளர வேண்டும், கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் தான் இந்த கண்காட்சி. இப்படி ஒரு கண்காட்சியை ஏற்படுத்திய தினகரன் நாளிதழுக்கு பாராட்டுக்கள். பல்வேறு கல்லூரிகளின் பல்வேறு விதமான படிப்புகள் என அனைத்தும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. தினகரன் பத்திரிக்கை 1977ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
தினகரன் நாளிதழ் அனைத்து தரப்பு மக்களுக்குமான செய்தியை வழங்கும் நடுநிலையான செய்தி நிறுவனம். நாடு முழுவதும் நடக்கும் அரசியில் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக செய்திகளை வழங்கும் பத்திரிக்கை தினகரன். தற்போது 75 லட்சம் வாசகர்களை கொண்ட இந்த பத்திரிக்கை இன்னும் கோடிகளில் வாசகர்களை பெற வேண்டும். செய்தித்தாள்களில் வரும் செய்திகளை வாசித்து பழகுங்கள். அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் நூலகங்களிலும் செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு அதை அடிப்படையாக சொல்லிக் கொடுங்கள். இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.