ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இருந்து கடந்த 6 மாதங்களில் புதிய உச்சமாக 1 லட்சத்து 5 ஆயிரம் டன் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் சாங்கிலி, தெலுங்கானாவின் நிசாமாபாத், தமிழகத்தில் ஈரோடு ஆகிய 3 இடங்களில் தரமான மஞ்சள் சந்தைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மஞ்சள் விலை சரிவடைந்த நிலையில், உலகளவில் அதன் தேவை அதிகரித்துள்ளதால் விற்பனை உயர்ந்துள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் பெய்த கனமழை காரணமாக மஞ்சளின் உற்பத்தியும், தரமும் குறைந்தது.
இதனால் கடந்த 3 மாதங்களில் மஞ்சள் விலை இருமடங்கு உயர்ந்து குவிண்டால் 15 ஆயிரம் ரூபாயை எட்டியது. இந்நிலையில் இந்தாண்டு 6 மாத காலத்தில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 19 டன் மஞ்சள் ஈரோட்டில் இருந்து ஏற்றுமதியாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 86 ஆயிரத்து 92 டன் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், அது 22 சதவீதம் உயர்ந்திருப்பது புதிய மைல் கல் என வணிகர்கள் கூறினர். பல ஆண்டுகளுக்கு இருப்பு வைத்து விற்பனை செய்யப்படும் மஞ்சள் தரமானதாக இருக்க குளிர்பதன கிடங்குகளை அரசு அமைத்து தர வேண்டும் என வணிகர்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.