சென்னை: சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: 15 வயதுக்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு கல்வியை வழங்கிடும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் கடந்த 2022-23ம் ஆண்டு முதல் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாவட்டத்தில் 2023-24ம் ஆண்டில் செயல்பட்டு வரும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் 15090 கற்போருக்கு 630 மையங்களில் கடந்த செப்டம்பர் 2023ம் மாதம் முதல் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு இறுதி அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு வருகிற 17ம் தேதி (நாளை) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.