Thursday, May 9, 2024
Home » கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன புதிதாக 4,200 பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன புதிதாக 4,200 பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

by Ranjith

திருவாரூர்: ‘கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. புதிதாக 4,200 பேருந்துகளை விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார். திருவாரூரில் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையத்திலிருந்து தாம்பரத்திற்கு 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், கிண்டிக்கு 3 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், கோயம்பேடு பஸ்நிலையத்திற்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும் என முழு அளவில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

2 நாள் முன் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்திற்கு ஆம்னி பேருந்துகள் மூலம் வந்த 20 ஆயிரம் பயணிகளில் 9 ஆயிரத்து 500 பயணிகள் கட்டணமில்லாமல் இயங்கி வரும் அரசு மாநகர பஸ் மூலம் அவர்கள் செல்லும் இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து தனி வாகனத்தில் செல்ல விரும்புபவர்களுக்கு ஆட்டோ மற்றும் டாக்ஸி முன்பதிவு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் மற்றும் பயணிகளை பொறுத்த வரையில் எவ்வித குற்றசாட்டும் வைக்கப்படாத நிலையில், ஒரு சில தனி நபர்கள் ஏதாவது அரசு மீது குற்றச்சாட்டு கூற வேண்டும் என்ற எண்ணத்தில் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தொழிற்சங்கங்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெறுகிறது.

புதிதாக நீண்ட தூர பேருந்துகள் ஆயிரத்து 666 எண்ணிக்கையில் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு அதில் முதல் கட்டமாக 100 பேருந்துகளை முதல்வர் இயக்கி வைத்துள்ளார். இதேபோன்று விரைவு போக்குவரத்து கழகத்திற்காக 200 புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்தம் 4 ஆயிரத்து 200 பேருந்துகள் புதிதாக விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

You may also like

Leave a Comment

19 − eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi