ஆவடி: ரூ.35 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணியை ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார். ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பூவிருந்தவல்லி மேற்கு ஒன்றியம் நெமிலிச்சேரி ஊராட்சியில் தேவி நகர் லோட்டஸ் அபார்ட்மெண்ட்ஸ் செல்லும் சாலை, நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாகவும் சேதமடைந்து சீரமைக்கப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசரிடம் புதிய சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்ற சா.மு.நாசர் எம்எல்ஏ பொதுமக்களின் குறைகளை நிறைவேற்றும் விதமாக, அவரது பரிந்துரையின் பேரில் நெமிலிச்சேரி ஊராட்சி ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கியது. அதன் அடிப்படையில் நேற்று காலை ரூ.35 லட்சம் செலவில் புதிதாக அமைக்கும் பணியை பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ சாலைப் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கே.ஜே.ரமேஷ், ராஜி, பி.எல்.ஆர்.யோகா பரமேஸ்வரி கந்தன், நரேஷ்குமார், பிரேம்ஆனந்த் சுரேஷ், தமிழ்ச்செல்வி, வாசுகி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.