Wednesday, May 15, 2024
Home » நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: வடம் பிடித்து தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு!

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: வடம் பிடித்து தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு!

by Suresh

நெல்லை: திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் ஆனித் தேரோட்டத்தினை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாட்டிலுள்ள பிரசித்திப் பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆனித் திருவிழா கடந்த 24.06.2023 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினந்தோறும் சுவாமி மற்றும் அம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முக்கிய நிகழ்வான ஆனித் தேரோட்டம் இன்று (02.07.2023) வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தினை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதியம்மன் திருக்கோயிலில் ரூ. 3.91 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அம்மன் சன்னதி மேற்கு பிரகார மண்டபம், கருஉருமாறி தீர்த்தக் குளம், அம்மன் சன்னதி மேற்கூரையில் தட்டோடுகள் பதித்தல் மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்பு அமைக்கும் பணிகள், ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அருள்மிகு நெல்லையப்பர் ஓதுவார் பயிற்சிப் பள்ளி கட்டுமானப் பணிகள், பாளையங்கோட்டை ஸ்ரீ காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சீர்மிகு வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்), ஓடுதளம் மற்றும் வகுப்பறைகள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளையும், பள்ளி மாணவிகளுக்கான விடுதி மற்றும் கருணை இல்லம் ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்திடவும், விடுதி மற்றும் கருணை இல்ல மாணவியருக்கு தேவையான கூடுதல் வசதிகளை செய்து தந்திடவும் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிகளில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், அப்துல் வகாப், ரூபி ஆர். மனோகரன், மாநகராட்சி மேயர் சரவணன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் மைதீன்கான், மண்டல இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

7 − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi