சென்னை: திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த பிப்.1ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை: கனமழையின் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அதீத பாதிப்பினை கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த கூடுதல் காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மின் உபயோகிப்பாளர்களின் மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் டிச.18 முதல் ஜன.2 வரை இருந்த நிலையில், அபராதத் தொகை இல்லாமல் பிப்.1ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த கூடுதல் காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. இந்த காலநீட்டிப்பு வீடு, வணிக பயன்பாடு, தொழிற் சாலைகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மற்றும் பிற மின்நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும்.