நெல்லை: நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பரப்புரையில் ஈடுபட்ட போது அவருக்கு ஆதரவாக பாஜக சின்னமான தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட சேலை அணிந்த 100 பெண்கள் வாக்கு சேகரித்தனர். வேட்பாளர்களை அறிவிக்கும் முன்னரே நெல்லை தொகுதியில், பாஜக வேட்பாளராக தன்னை தானே கட்சி அறிவித்துக்கொண்ட நயினார் நாகேந்திரன், கடந்த 3 நாட்களாக தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். கிராமப்புறங்களில் இரு நாட்கள் பரப்புரை மேற்கொண்ட அவர், மாநகர பகுதிகளான மீனாட்சிபுரம் சந்திப்பு, கைலாசபுரம் போன்ற பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
கைலாசபுரத்தில் பரப்புரையில் ஈடுபட்ட அவரை, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது பரப்புரையில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக, பாஜக கட்சி சின்னமான தாமரை பொறிக்கப்பட்ட சேலை அணிந்து 100 பெண்கள் தாமரை சின்ன கொடிகளை ஏந்தி ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தார்கள். தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட சேலைகளை பெண்களுக்கு வேட்பாளர் சார்பில் வழங்கப்பட்டுள்ளதா? என்று தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விதிமீறல் நிரூபணமானால் நயினார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.