நெல்லை: நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடலில் பாறையின் இடையே கப்பலுடன் சிக்கிய நீராவி உற்பத்திக் கலன் மீட்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6வது அணு உலைகளுக்கான நீராவி உற்பத்தி கலன்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது. தொடர்ந்து மற்ற 2 நீராவி ஜெனரேட்டர்களும் கடந்த 7ந்தேதி மிதவை கப்பலில் ஏற்றி, இழுவை கப்பல் மூலமாக கூடங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது தரை தட்டியது.பின்னர் நீராவி உற்பத்தி கலனை மீட்பதற்காக கடந்த 18 நாட்களாக இந்திய அணுமின் உற்பத்தி கழகம் ஈடுபட்டு வந்தது.
இதனையடுத்து கடந்த 10 நாட்களாக சாலை அமைக்கும் பணிகள் நடந்து முடிந்தது. தற்போது நீராவி உற்பத்தி கலன் அதிநவீன 30 டயர்கள் கொண்ட இழுவை கப்பல் மூலம் இழுக்கும் பணிகளை கூடங்குளம் அணுமின் நிலையம் மேற்கொண்டுள்ளது. இந்த நீராவி உற்பத்தி கலன்களை மீட்கும் பணியில் கடற்படை உயர் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் 19 நாட்களாக பல்வேறு முறைகளில் நடந்த மீட்பு நடவடிக்கையின் முயற்சியாக தற்போது ஒரு நீராவி உற்பத்திக் கலன் மீட்கப்பட்டுள்ளது. கப்பலில் கொண்டு வரப்பட்ட 2 நீராவி உற்பத்திக் கலன்கள் கடந்த 8ம் தேதி கடலில் பாறையின் இடையே சிக்கிக் கொண்டது. ஒரு நீராவி உற்பத்திக் கலன் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு நீராவி உற்பத்திக் கலனை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.