புதுச்சேரி: நீட் தேர்வில் முதுநிலை மருத்துவ படிப்பில் பூஜ்ஜிய சர்ச்சைக்கு கவர்னர் தமிழிசை புது விளக்கமளித்துள்ளார்.
புதுச்சேரியில் பள்ளி சுகாதார நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் 33 சதவீதம் பெண்களுக்கான இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணம். நீட் தேர்வில் தவறான கருத்து சிலரால் முன்னிறுத்தப்படுகிறது.
ஜீரோ மதிப்பெண் வாங்கினால் கூட நீட் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படலாம். அப்படியானால் நீட் தேர்வு எந்தவித பிரயஜோனமும் இல்லையென்று கூறுகின்றனர். இது ஜீரோ மார்க் இல்லை, ஜீரோ சதவீதம். சில நேரங்களில் இடங்கள் காலியாக இருக்கும்போது தகுதி வாய்ந்தவர்களாக இருந்து, ரேங்க்கில் வரமுடியாதவர்கள் இதில் சேரலாம் என்பது தான். இது முதுநிலை மருத்துவக் கல்விக்கு மட்டும்தான்.
ஏற்கனவே இது மணிப்பூர் மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அதனால் நீட் தேர்வு தகுதியற்றதாகிவிட்டது என்று சொல்வது அர்த்தமற்றது. இது புரிந்துகொள்ளாமல் சொல்வது. நீட் தேர்வு தேவை. இது ஒரு மறு சீரமைப்பு என்று சொல்லலாம். மாணவர்களுக்கு பலன் தருவது என்றும் சொல்லலாம். பிரதமர் எவற்றையெல்லாம் சீர்த்திருத்த முடியுமோ அவற்றையெல்லாம் சீர்த்திருத்தி கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.