சென்னை: நீட் தேர்வு விவகாரத்தை வைத்து பாரதிய ஜனதா கட்சிக்கு கூட்டணி கட்சிகள் திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணி ஆகியோர் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கையால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்திலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என திமுகவினருக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார். அதே நேரத்தில் அதிமுக – பாஜ கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் நீடிக்குமா? என்ற பரபரப்பு நிலவி வருகிறது. ஏனென்றால் இரு அணியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி வருகின்றனர். இதன் உச்சக்கட்டமாக பாஜ தலைவர் அண்ணாமலை கடந்த திங்கட்கிழமை அளித்த பேட்டியில் அதிமுகவை கடுமையாக விமர்ச்சித்திருந்தார்.
அது மட்டுமல்லாமல் முன்னாள் முதல்வர் ெஜயலலிதா பற்றியும் கடுமையாக விமர்ச்சித்து இருந்தார். அதாவது முன்னாள் முதல்வர்(ஜெயலலிதா) நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்பட்டுள்ளார். அதனால் தமிழ்நாடு ஊழல் மிகுந்த மாநிலமாக மாறியுள்ளது என்று அண்ணாமலை, ஜெயலலிதா மீது நேரடியாகவே தாக்குதல் தொடுத்து இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது ஜெயலலிதா ஆட்சிக்காலம்தான் மோசமான ஆட்சிக்காலம் என்று தாக்கியதோடு அவர் ஊழலுக்காக தண்டிக்கப்பட்டவர் என்றும் தாக்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனது தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கி வரும் அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கடந்த சில மாதங்களாக மோதல் இருந்து வந்தது. சமீபத்தில் அண்ணாமலையின் பிறந்த நாளுக்கு கூட எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துச் சொல்லவில்லை.
இதனால், இரு கட்சியினருக்கும் மோதல் இருந்துவரும் நிலையில், ஜெயலலிதாவையும், அதிமுக மாஜி அமைச்சர்களையும் அண்ணாமலை தாக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜெயலலிதாவை அதிமுகவினர் கடவுளுக்கு இணையாக பாவித்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஜெயலலிதா மீதே அண்ணாமலை தாக்குதல் தொடுத்திருந்தார். இந்த நிலையில் கடந்த 13ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் எந்தவிதமான அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் அற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை பொதுவெளியில் திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் பொறுப்பற்ற முறையில் பேட்டி அளித்துள்ளதற்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். அதே நேரத்தில் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கண்டனம் தெரிவித்து இருந்தார். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று அண்ணாமலையை எச்சரித்து இருந்தார்.
இந்த நிலையில் நீட் தேர்வு முடிவு குறித்து பாஜ கூட்டணியில் உள்ள பாமக கடும் அதிருப்தியை தெரிவித்து இருந்தது. அதாவது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது; பணக்கார, நகர்ப்புற மாணவர்களுக்கு சாதகமானது என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களின் பின்னணி குறித்த ஆய்வில் அத்தேர்வு ஏழை மாணவர்களால் எட்டிப்பிடிக்க முடியாதது என்பது உறுதியாகியுள்ளது. மருத்துவம் படிக்க வருவோர் அனைவரும் ஒரே மாதிரியான அளவுகோலால் அளவிடப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறுவது சரி என்றால், நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களின் சமூக, பொருளாதார, கல்வி வாய்ப்புகளும் ஒரே மாதிரியாக இருப்பது தானே சரியானதாக இருக்கும்? அவ்வாறு இல்லாமல் வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கு போட்டி நடத்தினால், கல்வி வாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் சிறந்தவர்கள் தானே வெற்றி பெறுவார்கள்? அது தானே இப்போது நடந்திருக்கிறது? இது எந்த வகையில் சமூகநீதியாகவும், சமநீதியாகவும் இருக்கும்? என்பதை அரசு விளக்க வேண்டும் என்று கூறியிருந்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அன்புமணி இவ்வாறு தெரிவித்து இருப்பது பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே நேரத்தில் பாஜ கூட்டணிக்கு இதுவரை ஆதரவு தெரிவித்து வந்த ஓபிஎஸ்சும் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்தில் இருந்து பாஜவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நீட்டுக்கு எதிரான கருத்தையும் பதிவிட்டுள்ளார். அதாவது, நீட் தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் நகர்ப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வெளி நாடுகளில் சென்று மேற்படிப்பு பயிலவும், நகர்ப்புறங்களிலேயே பணிபுரியவும் தான் விரும்புகின்றனர்.
அதே சமயத்தில் கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பு பயின்றால், கிராமப்புறங்களுக்கான மருத்துவச் சேவை பூர்த்தி செய்யப்படும். எனவே, கிராமப்புறங்களுக்கு எதிரான, சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வினை ரத்து செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இதற்குத் தேவையான அழுத்தத்தை ஒன்றிய அரசுக்கு திமுக அரசு கொடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். அவரும் தற்சமயம் பாஜவுக்கு எதிரான நிலைப்பாட்ைட எடுக்க தொடங்கியுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை ெதாகுதியில் அண்ணாமலை, எடப்பாடி அணிக்கு தான் ஆதரவு தெரிவித்தார். தனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற ஆதங்கம் அவரிடம் இருந்து வருகிறது. அவரும் தற்போது நீட் விவகாரத்தில் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க தொடங்கியுள்ளார். நீட் விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளதால் கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.