சென்னை: சூரியனை ஆராய்வதற்காக எல்1 புள்ளியை நோக்கி ஆதித்யா விண்கலம் சரியான பாதையில் பயணிக்கிறது. அதற்கான செயல்முறை வெற்றிகரமாக நிகழ்ந்தது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளனர். சூரியனை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் ஆதித்யா எல் 1 திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது. இதற்காக கடந்த செப்.2ம் தேதி ஆந்திர மாநிலம் ஹரிக்கோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து புவி வட்டபாதையில் 5 சுற்றுகளை முடித்த ஆதித்யா விண்கலம் பூமியை சுற்றி முடித்த பின் தன் இலக்கை நோக்கி யபயணத்தை கடந்த செப்.19ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் எல்1 புள்ளியை நோக்கி பயணிக்கும் ஆதித்யா விண்கலத்தை சரியான பாதையில் பயணிக்க வைக்கும் செயல்முறை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவு:
ஆதித்யா விண்கலம் சீராக இயங்கி வருகிறது, சூரியன்-பூமி எல்1 புள்ளியை நோக்கி பயணித்து வருகிறது. ஏற்கெனவே திட்டமிட்டப்படி விண்கலத்தின் பாதையை சரி செய்யும் பணிகள் கடந்த அக்.6ம் தேதி நடந்தது. இந்த செயல்முறை வெறும் 16 விநாடிகளில் நிகழ்த்தப்பட்டது. கடந்த செப்.19ம் தேதி எல்1 லெக்ராஞ்சியன் புள்ளியை நோக்கிய பாதையில் விண்கலத்தை செலுத்தும் பணிகள் நடத்தப்பட்டபோது, அதன் பாதையை சரி செய்யும் பணிகள் செய்ய வேண்டும் என மதிப்பிடப்பட்டது. பாதையை சரி செய்து எல் 1 புள்ளியின் ஒளிவட்ட பாதையை நோக்கி விண்கலம் பயணிப்பதை உறுதி செய்யும். மேலும் விண்கலம் தனது பயணத்தை தொடரும்போது மெக்னெடோ மீட்டர் கருவி சில நாட்களில் தனது செயல்பாடுகளை தொடங்கும்.