மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வேப்பங்கரணை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (55). விவசாயி. இவரது மனைவி சந்திரா (50). இந்நிலையில், கோவிந்தசாமி நேற்று விவசாய வேலைக்கு சென்றிருந்தார். சந்திரா, மேல்மருவத்தூரில் மகனை பார்க்க சென்றுவிட்டார். மதியம் சந்திரா, மீண்டும் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது, பீரோ உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 10 சவரன் நகை, ரூ.25 ஆயிரம் அரை கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போயிருந்தது. இதேபோன்று, ஒரத்தி கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் தூயவன் (50) என்பவரின் வீட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் திருடிச்சென்றுள்ளனர். இந்த 2 கொள்ளை சம்பவங்கள் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர். அப்பகுதி சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடுகின்றனர்.