தண்டையார்பேட்டை: தியாகராய கல்லூரியில் என்சிசி மாணவர்களுக்கான போட்டி நடைபெற்றது. வண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சர்.பி.டி.தியாகராய கல்லூரியில் என்சிசி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில், தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகம், பச்சையப்பன் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி, அம்பேத்கர் கல்லூரி, ஜெயா கல்லூரி உள்ளிட்ட 15 கல்லூரிகளை சேர்ந்த 420 என்சிசி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் டிரில், அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியை மேஜர் மதுசூதனன் மற்றும் என்சிசி அதிகாரி மோகன்ராஜ் ஆகியோர் பங்கேற்று, மாணவர்களின் அணிவகுப்பை தொடங்கி வைத்து பார்வையிட்டனர். மேலும் இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்படுகிறது. இதனை தியாகராய கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் 4வது ஆண்டாக நடத்துகிறார்கள். இதன் வாயிலாக மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், நேர்மையையும் கற்று கொடுக்கும் விதமாக போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.