சென்னை: சென்னைப் பல்கலைக் கழகத்தின் புவியியல் துறையின் சார்பில் தொற்று நோய் மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மையில் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் என்ற தலைப்பிலான 3 நாள் கருத்தரங்க தொடக்கவிழாவில் கலந்து கொண்ட, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: சென்னைப் பல்கலையில் ஒரு காலத்தில், பிசி மற்றும் எம்பிசி பிரிவைச் சேர்ந்த மாணவ மாணவியர் இங்கே சேர்வது என்பது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல. இப்போது நமது பிள்ளைகள் இங்கே அமர்ந்திருப்பது பெருமை.
பேரிடர் என்பது தற்போதைய நிலையில் வெள்ளம், கொரோனா போன்றவற்றை நாம் பார்த்துள்ளோம். தொற்று நோய் என்று வரும் போது, விலங்கில் இருந்து மனிதனுக்கும், மனிதனில் இருந்து விலங்குக்கும் தொற்றும் வாய்ப்புள்ளது. கொரோனா தொற்று காலத்தில் உலகம் முழுவதும் லட்சக் கணக்கில் மக்கள் இறந்ததையும் நாம் பார்த்திருக்கிறோம். இயற்கை பேரிடர் குறித்த விழிப்புணர்வை அடுத்ததலைமுறைக்கும் எடுத்து செல்ல வேண்டும். இது தொடர்பான விவரங்களை அரசுக்கு அறிக்கையாகவும் நீங்கள் கொடுக்கலாம். அதன் மூலம் அரசு என்ன செய்யலாம், பள்ளி அளவில் என்ன செய்யலாம் என்றும் யோசிப்போம், என்றார்.