மும்பை: மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்சி ஏக்நாத் கட்சேவுக்கும், அவரது மருமகளும் பாஜக மக்களவை எம்பியுமான ரக்ஷா கட்சேவுக்கும் ரூ.137 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில், சட்ட விரோதமாகவும் அரசின் அனுமதியின்றியும் அம்மாநில தேசியவாத காங்கிரஸ் எம்எல்சி ஏக்நாத் கட்சேவும், அவரது மருமகளும் பாஜக எம்பியுமான ரக்ஷா கட்சேவும் சட்ட விரோதமாக மணல் அள்ளியதாக புகார்கள் சென்றன.
அதுகுறித்து கனிம வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, மாநில அரசிடம் முறையான அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மணல் அள்ளியது உறுதி செய்யப்பட்டது. சுமார் 5 லட்சம் டன்களுக்கும் மேலான மணல் மற்றும் கருங்கற்கள் சட்ட விரோதமாக எடுக்கப்பட்டுள்ளன. அதையடுத்து தேசியவாத காங்கிரஸ் எம்எல்சி ஏக்நாத் கட்சே மற்றும் அவரது மருமகளும் பாஜக எம்பியுமான ரக்ஷா கட்சே ஆகிய இருவருக்கும், ரூ.137.14 கோடி அபராதத் தொகையை விதித்த அதிகாரிகள், அதனை 15 நாள்களுக்குள் அரசுக்குச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகிய ஏக்நாத் கட்சே, தேசியவாத காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.