டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு ரூ.900 கோடியில் மேம்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் அதிக விபத்து பகுதியாக கண்டறிந்த 35 இடங்களில் சீரமைப்பு, மேம்படுத்தும் பணிகளை செய்ய முடிவு செய்யபட்டுள்ளது. விபத்துகளை தடுக்கும் வகையில் வாகனங்களுக்கான சுரங்கப்பாதை, மேம்பாலங்கள் ரூ.900 கோடியில் அமைக்கபட உள்ளன.
மேம்பாட்டு பணிக்கான டெண்டர் மார்ச் மாதத்துக்கு முன்பே வழங்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிக விபத்து நடக்கும் இடங்களாக கண்டறியப்பட்ட 23 இடங்களில் சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன. 23 இடங்களில் சுமார் ரூ.390 கோடியில் விபத்து தடுப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மட்டும் 10 இடங்கள் அதிக விபத்து பகுதிகளாக கண்டறியபட்டுள்ளன. சாலை விரிவாக்கத்தின் மூலம் சென்னை – திருப்பதி சாலையில் விபத்துகள் நடைபெறுவது தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செங்குன்றம் முதல் இரும்புலியூர் வரையிலான புறவழிச் சாலையில் மட்டும் 5 இடங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடக்க உள்ளன. கோயம்பேடு – மதுரவாயல் இடையேயும் தீண்டிவனம் நெடுஞ்சாலையிலும் தலா 3 இடங்களில் மேம்பாட்டு பணிகள் நடக்கவுள்ளது.