சென்னை: நடிகை விஜயலட்சுமி மீது புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். சென்னை பட்டாளம் கனகராஜ் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் இரா. மணி (35). இவர் நாம் தமிழர் கட்சியின் எழும்பூர் தொகுதி 77வது வட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் புளியந்தோப்பு காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு புகார் அளித்தார்.
கடந்த 28ம் தேதி திரைப்பட நடிகை விஜயலட்சுமி மற்றும் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து ஆபாசமாக பேசி பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். இது மட்டுமல்லாமல் மாட்டுக்கறி தின்பவர் என்று இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை இழிவுபடுத்தும் நோக்கில் பேசியுள்ளார்கள்.
எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று கொடுங்கையூர், எம்கேபி நகர், வியாசர்பாடி, செம்பியம் உள்ளிட்ட காவல்நிலையங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகை விஜயலட்சுமி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.