சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் பிபிஜிடி சங்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தகுமார் சில தினங்களுக்கு முன்பு புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வந்தார். நேற்று முன்தினம் மப்பேடு சஞ்சீவி, கச்சிப்பட்டு சாந்தகுமார், கடம்பத்தூர் சரத்குமார், வெள்ளவேடு ஜெகன், மண்ணூர் சூர்யா, செல்வம் உள்ளிட்ட 7 பேரையும் ஆயுதங்கள் வைத்திருந்ததாக போலீசர் கைது செய்தனர்.
நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் குணசேகர் விசாரித்தபோது சாந்தகுமார் மயங்கி விழுந்ததாக கூறி திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். சாந்தகுமாரை போலீசார் அடித்து கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் சாந்தகுமாருடன் கைதான 6 பேரும் நீதிபதியிடம், நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் குணசேகர் அடித்ததால் சாந்தகுமார் உயிரிழந்ததாக வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் குணசேகரனை ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.