மும்பை: ரூ.11 கோடி மதிப்பிலான போதை பொருள் விழுங்கிய ஆப்ரிக்க பிரஜையை மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சிஎஸ்எம்ஐ விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளிடம் போதைப்பொருள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில் ஆப்ரிக்க நாடான சியரா லியோன் நாட்டவரைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
தான் அதிகாரிகளிடம் பிடிபட்டு விட்வோம் என்ற பயத்தில், அந்த நபர் வைத்திருந்த 74 போதை மாத்திரைகளை விழுங்கிவிட்டார். இதையறிந்த அதிகாரிகள், அந்த நபரை பிடித்து விசாரித்தனர். பின்னர் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி, அவர் மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வயிற்றில் இருந்த 74 மாத்திரைகள் வெளியேற்றப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.11 கோடி என கூறப்படுகிறது. அதையடுத்து அந்த நபரை அதிகாரிகள் கைது ெசய்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மும்பை விமான நிலையத்தில் சியரா லியோன் நாட்டவர் கோகைன் போதைப்பொருளுடன் பிடிபட்ட இரண்டாவது வழக்கு இதுவாகும். 19.79 கோடி மதிப்பிலான 1,979 கிராம் கோகைன் போதைப்பொருளுடன் கடந்த மார்ச் 24ம் தேதி ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.