புதுடெல்லி: அயோத்தியில் திறந்து வைக்கப்பட்டுள்ள விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகியின் பெயர் வைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ரூ.1,450 கோடி செலவில் அயோத்தியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி கடந்த 30ம் தேதி திறந்து வைத்தார். இந்த விமான நிலையத்துக்கு முன்பு மர்யதா புருஷோத்தம் ராம் சர்வதேச விமான நிலையம் என பெயர் வைக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய விமான நிலையத்தின் பெயர் ‘மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் அயோத்தியாதம்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெயர் மாற்றத்துக்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.