சென்னை: நாமக்கல் கவிஞரின் மூத்த மகள் ராஜலட்சுமி அனுமந்தன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்னும் அருமையான கவிதை வரிகளை படைத்து தமிழர்களின் நெஞ்சங்களில் எல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பவர் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை. தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தின் 10 மாடி கட்டிடம் நாமக்கல் கவிஞரின் உயிர்த் துடிப்பான இந்த கவிதை வரிகளைத் தாங்கி நிற்கிறது; இரவிலும் ஒளிர்கிறது. அந்த மகத்தான கவிஞரின் மூத்த மகள் ராஜலட்சுமி அனுமந்தன் (வயது 92) வயது முதிர்வு காரணமாக நேற்று (8.4.2024) மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருந்தினேன். ராஜலட்சுமி அனுமந்தன் மறைவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வருந்தும் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்களுக்கும், தமிழ் நெஞ்சங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.