சென்னை: பள்ளிக் கல்வித் துறை சார்பாக, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிதல் மற்றும் அவர்களுக்கான தனிநபர் திட்டத்தை வடிவமைத்து சிறப்பு கல்வி மற்றும் சிகிச்சைகளை வழங்குவதற்கான ‘நலம்நாடி’ என்ற செயலி அறிமுகம் செய்தல், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவிஷ்ய வித்யாலயாவில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கான நேரடி பயனாளர் பரிவர்த்தனை தொடங்கிவைத்தல்உள்ளிட்ட நிகழ்வுகள் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி இந்த செயலிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: மாற்றுத்திறனாளி மாணவர்களிடையே ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனைக் கண்டறியவே “நலம் நாடி” செயலி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பயிற்றுனர்கள் இச்செயலியைப் பயன்படுத்தி குறைபாடுகளை எளிதில் கண்டறிவார்கள். பின்னர் சிறப்புப் பயிற்றுநர்களால், இந்தச் செயலியைப் பயன்படுத்தி 21 வகையான குறைபாடுகளுக்கு முழுமையான பரிசோதனை மேற்கொள்ள இயலும்.
emis.tnschools.gov.in இணையதளத்தில் தங்களது கோரிக்கையினை இணைய வழியே சமர்ப்பித்திட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குறைகளை தீர்வு காண ஏற்படுத்தப்பட்டுள்ள வசதியினைப் போன்று அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகங்களின் குறைகளை களைந்திட ஏதுவாக புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, தொடக்கக் கல்வி இயக்குநர்கண்ணப்பன், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.