கொழும்பு:நாகப்பட்டினம்-காங்கேசன்துறை இடையே மீண்டும் படகு சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைக்கான இந்திய தூதர் தெரிவித்தார். இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரியாக சந்தோஷ் ஜா கடந்த டிசம்பரில் நியமிக்கப்பட்டார். புதிதாக பொறுப்பேற்றுள்ள அவர் இலங்கையின் வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு முதல்முறையாக சுற்றுபயணம் மேற்கொண்டு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கேசன் துறை,தலைமன்னார் ஆகிய துறைமுகங்களை சந்தோஷ் ஜா பார்வையிட்டார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான படகு சேவையை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்தார். பலாலி விமான நிலையத்தை பார்வையிட்ட அவர் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி விமான சேவையை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்தியாவின் உதவியுடன் புனரமைக்கப்பட்ட திருக்கேத்திஸ்வரம் கோயிலுக்கும் சென்று அவர் வழிபாடு நடத்தினார்.யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையின் (ஐபிகேஎப்) நினைவிடத்துக்கு சென்ற அவர்,இலங்கையில் உச்சக்கட்ட தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.