சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழாவின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் 6 செல்போன்கள், ஒரு சவரன் செயின், வெள்ளி கொலுசு திருடிய கொள்ளையர்களை போலீசார் சிசிடிவி பதிவு மூலம் தேடி வருகின்றனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 10 நாட்களாக மிக வெகு விமரிசையாக நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் விழா கடந்த சனிக்கிழமை நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த பங்குனி திருவிழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, கடந்த 10 நாட்களில், 6 பேரிடம் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஒருவரிடம் ஒரு சவரன் செயின் பறிப்பு, ஒரு குழந்தையிடம் 25 கிராம் வெள்ளி கொலுசு திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட 8 பேர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், போலீசார், கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று கொள்ளையர்களை தேடி வருகின்றனர். வழக்கமாக பங்குனி திருவிழாவின் போது அதிகளவில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு திருட்டு சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.