சென்னை: மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபருக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு W-22 மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS), போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, 45 வயது எதிரி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இவ்வழக்கு தொடர்பாக, சென்னை, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று (22.01.2024) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேற்படி வழக்கில் 45 வயது எதிரி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், எதிரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.100 அபராதம் விதித்து கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார். வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த மயிலாப்பூர் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை காவல் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.