டேராடூன்: சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் 7 நகரங்களில் நடக்கிறது. டேராடூனில் நடந்த ஈ பிரிவு லீக் ஆட்டத்தில் திரிபுரா-தமிழ்நாடு அணிகள் மோதின. டாஸ் வென்று களம் கண்ட திரிபுரா 20ஓவர் முடிவில் 5விக்கெட் இழப்புக்கு 129ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கணேஷ் சதீஷ் ஆட்டமிழக்காமல் 52, ரஜத் தேவ் 35 ரன் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. தமிழ் நாடு தந்த உதிரிகள் மட்டும் 18ரன். கூடவே வருண் சக்கரவர்த்தி, குல்தீப் சென் தலா 2விக்கெட் எடுத்தனர்.
தொடர்ந்து 130ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு விளையாடியது. தொடக்க வீரர் குருசுவாமி அஜிதேஷ் 2 ரன்னில் ரன் அவுட் ஆனார். அதன் பிறகு செழியன் ஹரிநிஷாந்த் 59, ஆட்டமிழக்காமல் சாய் சுதர்சன் 54, எம்.ஷாருக்கான் 15ரன் எடுத்தனர். அதனால் தமிழ்நாடு 16.5ஓவரிலேயே 2விக்கெட் இழப்புக்கு 133ரன் என இலக்கை கடந்து 8விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. திரிபுரா தரப்பில் 8 வீரர்கள் பந்து வீசியும், ரஜத் தேவ் மட்டும் ஒரு விக்கெட் எடுத்தார். இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள தமிழ்நாடு 2ல் வென்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. தமிழ்நாடு தனது அடுத்த ஆட்டத்தில் அக்.23ம் தேதி டெல்லியை சந்திக்கிறது.