Sunday, May 19, 2024
Home » கொலை வழக்கில் சிக்கிய பெண்ணின் செல்போன் வீடியோவில் ஏகப்பட்ட விவகாரம் இருப்பதாக சொல்கிறார்: wiki யானந்தா

கொலை வழக்கில் சிக்கிய பெண்ணின் செல்போன் வீடியோவில் ஏகப்பட்ட விவகாரம் இருப்பதாக சொல்கிறார்: wiki யானந்தா

by Neethimaan


‘‘கொலை வழக்கில் சிக்கிய பெண்ணின் செல்போன் வீடியோ பரபரப்பை கிளப்பியிருக்காமே..’’’ என்று ஆர்வத்துடன் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தென் கோடியில் உள்ள மாவட்டத்தில் தொழிலாளி ஒருவரின் கொலை வழக்கில் அவரது மகளையும், மகளின் ஆண் நண்பரையும் போலீசார் சமீபத்தில் கைது செய்தாங்க.. விசாரணையில் அந்த பெண்ணுடன் கைதான ஆண் நண்பர் மட்டுமில்லாமல் மேலும் பலர் நெருக்கமா பழகியது காவல்துறைக்கு தெரிய வந்திருக்கு.. குறிப்பா காவல்துறை, வனத்துறையை சேர்ந்தவங்கன்னு அரசு துறைகளை சேர்ந்தவங்களும் இருக்காங்களாம்.. இதனால இந்த கொலை நடந்தது தெரிந்தும் இவங்க மறைத்தாங்களா என்ற சந்தேகம் வந்திருக்காம்.. முதற்கட்டமா அந்த பெண்ணுடன் யார் யார் தொடர்பில் இருந்தாங்க என்ற பட்டியலை தனிப்படை தயாரிச்சிக்கிட்டு இருக்காங்களாம்..

விரைவில் இதுதொடர்பா துறைரீதியா நடவடிக்கை பாய்ந்து காக்கிகள், காடுகள் துறையில் இடமாற்ற நடவடிக்கைகள் இருக்கும்னு பேசிக்கிறாங்க.. விவகாரம் இத்தோடு நிற்காதாம்.. சம்பந்தப்பட்ட பெண்ணின் செல்போனில் ஏராளமான வீடியோக்களும் இருந்திருக்கு.. இதில முக்கிய பிரமுகர்கள் வேறு இருக்காங்களாம்.. இதனால இந்த கொலை வழக்கை தோண்டினால் விவகாரம் விஸ்வரூபம் ஆகிவிடுமோ என்கிற கலக்கமும் பலருக்கு வந்திருப்பதால், தங்களுக்கு வேண்டப்பட்ட காக்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தனிப்படை நடவடிக்கை பற்றி விசாரித்தும் வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைக்கட்சியின் பூத் உறுப்பினருங்க வேறவேற கட்சிக்கு மாறியது எலக்‌ஷன்ல வெளிச்சத்துக்கு வந்திருக்குதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தமிழகத்துல இலைக்கட்சி 4 அணிகளாக கிழிஞ்சு போச்சு.. சேலத்துக்காரர் பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின்னால, கட்சியோட கட்டமைப்ப வலுப்படுத்துறோம்னு, 2 கோடி மெம்பர்ச சேர்க்க தொடங்கினாரு.. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு டார்கெட்டையும் கொடுத்தாரு.. பூத் வாரியாக 13 உறுப்பினர்களை நியமனம் செஞ்சாங்க.. அதுல, மகளிர் அணி, இளைஞர் இளம் பாசறை, ஐடி அணி என எல்லா பிரிவுகளை உள்ளடக்கிய பட்டியலை தயாரிச்சாங்க.. மாவட்ட வாரியாகவும் நாங்க இவ்வளவு உறுப்பினர்களை சேர்த்துட்டோம்னு ஒரு கணக்கு காட்டியிருக்காங்க.. இந்த கணக்கு டுபாக்கூர் கணக்குன்னு நடந்து முடிஞ்ச எலக்‌ஷன்ல வெளிச்சத்துக்கு வந்திருக்குதாம்.. குறிப்பா, வெயிலூர், மிஸ்டர் பத்தூர், குயின்பேட்டை ஆகிய மாவட்டங்கள்ல, பெரும்பாலான பூத்கள்ல இலையோட உறுப்பினருங்களே இல்லையாம்..

பல இடங்கள்ல ஒற்றை இலக்கத்துலத்தான் தொண்டர்களே இருந்தாங்களாம்.. அவங்களும் கொஞ்ச நேரத்துல கிளம்பிட்டாங்களாம்.. புதுசா நியமிக்கப்பட்டவங்க எங்கேன்னு தேடிப்பார்த்தா, அவங்க எல்லாரும் வேறவேற கட்சிக்கு தாவிட்டதா தகவல் வந்திருக்குது.. கட்சிக்கு வந்தவங்களை, கட்சி பணிகள் குறித்து கூறி, ஒருங்கிணைத்து பணியாற்றணும், கடமைக்கு பூத் வாரியாக உறுப்பினர்களை நியமிச்சிட்டோன்னு கணக்கு காட்டினா எப்படின்னு கட்சிக்குள்ளவே, தலைமை நிர்வாகிகளை திட்டி தீர்க்குறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கட்சித்தலைமை விட்ட டோஸால் மாஜி அமைச்சர் ஒருத்தர் சைலண்டாக மாறிவிட்டாராமே, என்னவாம்..?’’ என அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா.‘‘நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கடலோர மாவட்ட இலைக்கட்சி மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ திடீரென சைலண்ட் மோடில் இருந்து வருகிறாராம்…

நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள், தொண்டர்களிடம் பேசுவதையும் குறைத்து விட்டாராம்.. அவர்களை நேரில் சந்திப்பதையும் தவிர்த்து வருகிறாராம்.. தேர்தலுக்கு பின்னர் ‘மணியானவர்’ ஏன் இப்படி சைலண்டா இருக்கிறார்னு தொண்டர்களும் அவர்களுக்குள் பேசிக்கிட்டாங்களாம்… இதற்கு முக்கிய காரணம், ‘‘கடலோர தொகுதியில் போட்டியிட மனுநீதி சோழன் மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சரான ‘கர்ம வீரர்’ தனது ஆதரவாளருக்கு சீட் கேட்டுள்ளார். ஆனால், ‘மணியானவர்’ திரைமறைவில் அதற்கான காய் நகர்த்தி தனது ஆதரவாளருக்கு சீட் வாங்கி விட்டாரு.. ஆனால், பிரசாரத்தின் போது செல்லும் இடங்களில் எல்லாம் மாஜி அமைச்சர், அவரது ஆதரவாளரான வேட்பாளருக்கு மக்களிடம் இருந்து எதிர்ப்பு அலைதான் வீசியதாம்.. இதில் ஒரு பக்கம் மாஜி அமைச்சரின் எதிரணியினர் திரைமறைவில் வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டிருக்காங்க..

இதனால பிரசார ஆரம்பம் முதல் இறுதிக்கட்ட பிரசார வரையிலும் வேட்பாளருக்கு எதிர்ப்பு அலை வீசியதால் டெபாசிட் கூட கிடைப்பது கஷ்டம்தாம் என்ற தகவல் தேர்தலுக்கு பின்னர் கட்சித் தலைமைக்கு சென்றதாம்… இதனால் கோபம் அடைந்த தலைமை, மாஜி அமைச்சரை நேரில் அழைத்து பயங்கர டோஸ் விட்டுள்ளதாம்.. இதனால் தான் அவர் சைலண்டாக இருந்து வருவது சொந்த கட்சிக்குள்ளே தெரிய வந்ததாம்.. இந்த டாப்பிக் தான் தொண்டர்களுக்குள்ளும் இப்ப ஓடிக்கிட்டிருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தர்மயுத்த நாயகனுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம் என்னவாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர எம்பி தொகுதியில் முக்கனிகளில் 2ம் பழ சின்னத்தில் தர்மயுத்த நாயகன் போட்டியிட்டார். இவர் தரப்பில் வாக்குப்பதிவிற்கு முன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாம்.

ஒரு சில இடங்களில் இதனால் தாமரை கட்சியினருடன் பஞ்சாயத்தும் நடந்தது. கடைசி நேரத்தில் அவசர அவசரமாக கொடுக்கப்பட்டதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட குக்கர் கட்சியினர் வாங்கிய பணத்தை கொடுக்காமல் அப்படியே அமுக்கி கொண்டனராம். குறிப்பாக, குளம் என முடியும் தொகுதியில் வாங்கிய பணத்தை யார் கண்ணிலும் கூட காட்டவில்லை என்ற மேட்டர் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையறிந்த பலர் தர்மயுத்த நாயகனிடம் சென்று, தங்களது பகுதிக்குரிய பணம் வந்து சேரவில்லை என தொடர்ந்து முறையிட்டு வருகின்றனராம். இதையடுத்து தர்மயுத்த நாயகன் தரப்பு எவ்வளவு பணம் யார், யாரிடம் கொடுக்கப்பட்டது, எந்தெந்த பகுதிக்கு போய் சேர்ந்தது, அமுக்கியது யார் என்பது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன…’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

twenty + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi