திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி உடும்பன்சோலையில் முன் விரோதத்தில் பெண்ணை பக்கத்து வீட்டுக்காரர் தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலை பகுதியை சேர்ந்தவர் ஷீலா (31). அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சசிகுமார். 2 பேரும் அங்குள்ள ஒரு ஏலத் தோட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஷீலா அங்குள்ள ஒரு ஏலம் சேகரிக்கும் மையத்திற்கு அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சசிகுமார், ஷீலாவை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து அங்குள்ள தொழிலாளர் குடியிருப்புக்கு கொண்டு சென்றார்.
பின்னர் கதவை பூட்டிவிட்டு ஷீலாவின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அந்த பகுதியினர் விரைந்து சென்று கதவை உடைத்து ஷீலாவை மீட்டனர். படுகாயமடைந்த அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை ஷீலா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உடும்பன்சோலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.