Wednesday, May 22, 2024
Home » திருமணம் செய்து பிரிந்ததால் கணவரால் கடத்தப்பட்ட நகராட்சி பெண் ஊழியர் அறையில் அடைத்து சித்ரவதை: சென்னையில் போலீஸ் மீட்டது

திருமணம் செய்து பிரிந்ததால் கணவரால் கடத்தப்பட்ட நகராட்சி பெண் ஊழியர் அறையில் அடைத்து சித்ரவதை: சென்னையில் போலீஸ் மீட்டது

by Dhanush Kumar

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஒரு மாதத்துக்கு முன் கணவரால் கடத்தப்பட்ட நகராட்சி பெண் ஊழியரை தனிப்படை போலீசார் சென்னையில் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை தெற்கு சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது மகள் உமா மகேஸ்வரி (28). மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா, பல்லவராயன்பத்தை சேர்ந்த மாரிமுத்துக்கும் (38), தனலட்சுமிக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் மாரிமுத்துவின் பார்வை தனலட்சுமியின் மகள் உமாமகேஸ்வரி மீது விழுந்தது. அவருக்கும், மாரிமுத்துவை பிடித்ததால், தாய் தனலட்சுமிக்கு தெரியாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு மயிலாடுதுறையில் குடும்பம் நடத்தினர். எந்த வேலைக்கும் போகாத மாரிமுத்து, மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதை உமா மகேஸ்வரி தாயிடம் தெரிவித்தார். இதையடுத்து உறவினர்கள் உமா மகேஸ்வரியை மாரிமுத்துவிடமிருந்து பிரித்து வந்து தனலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் மயிலாடுதுறையில் கடந்த ஜூன் 20ம் தேதி, இரவு 7 மணியளவில் காரில் சிலருடன் வந்த மாரிமுத்து, தாயுடன் சாலையில் நடந்து சென்ற உமாமகேஸ்வரியை கடத்தி சென்றார். இது குறித்து தனலெட்சுமி கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் உமா மகேஸ்வரி சென்னையில் இருப்பதாக தகவல் வந்தது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீசார் அங்கு சென்று அவரை மீட்டு, மயிலாடுதுறை காவல்நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் இரவு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் உமாமகேஸ்வரி அளித்த வாக்குமூலத்தில், ‘என்னை காரில் கடத்திய மாரிமுத்து, மயக்க மருந்து கொடுத்து ஒரு அறையில் அடைத்து வைத்திருந்தார். பின்னர் ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றார். சென்னையில் ஒரு தர்காவுக்கு அழைத்து சென்று பைத்தியம் பிடித்துவிட்டது என்று கோடங்கி பூஜை செய்து நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உமா மகேஸ்வரியை மயிலாடுதுறை கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கணவர் மாரிமுத்து மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

19 + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi