கொசு மருந்து வாங்கியதில் முறைகேடு நகராட்சி ஆணையர், ஆய்வாளர் சஸ்பெண்ட்: ஓய்வுபெறும் நாளில் அதிரடிசத்தியமங்கலம்: கொசுமருந்து வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் நகராட்சி ஆணையர், சுகாதார ஆய்வாளர் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் கொசு மருந்து வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நகராட்சி தலைவர் ஜனார்த்தனன், துணைத் தலைவர் பி.ஏ.சிதம்பரம் மற்றும் கவுன்சிலர்கள் கடந்த மே 30ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் உள்ள இருப்பு அறையில் சோதனையிட்டனர்.
அப்போது ₹4 லட்சம் செலவில் வாங்கப்பட்டதாக இருப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்ட கொசு மருந்துகள் இருப்பு அறையில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். 2016 மற்றும் 2019 டிசம்பரில் வாங்கி காலாவதியான பழைய கொசு மருந்து 2 கேன்கள் மட்டுமே இருந்தன. இதனால் மே மாதத்தில் புதிதாக வாங்கப்பட்ட கொசு மருந்துகள் எங்கே என நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட நகராட்சி நிர்வாக உயரதிகாரிகள் புஞ்சை புளியம்பட்டி நகராட்சி கமிஷனர் செய்யது உசேன், சுகாதார ஆய்வாளர் செந்தில் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதில் நகராட்சி கமிஷனர் செய்யது உசேன் மே 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் நிலையில் பணி ஓய்வு தினத்தன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் அவருக்குண்டான பணப்பலன்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.