கேரளா: முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணிகள் குறித்து ஒன்றிய நீர்வளத்துறை கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். பருவகாலங்களில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து பராமரிப்பதற்காக மூவர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்து இருந்தது. இவர்களுக்கு உதவியாக 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவும் ஏற்படுத்தப்பட்டது. கடந்த மார்ச் 27-ம் தேதி ஒன்றிய நீர்வள தலைமை கண்காணிப்பு குழுவினர் அணை பகுதியை ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தன.
தற்போது முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருப்பதால் 5 பேர் கொண்ட துணை குழு இன்று அணை பகுதிகளை ஆய்வு செய்தது. குழுவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டு பிரதிநிதிகள் படகிலும், கேரளா அதிகாரிகள் வள்ளக்கடவு வழியாக ஜீப் வாகனத்திலும் பேபி அணை, கேளரி பகுதி, மதகு பகுதிகளுக்கு சென்று மழையின் அளவு, அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம் மற்றும் மதகு பகுதியில் நீர் கசிவு ஆகியவற்றை ஆய்வு செய்யவுள்ளனர். தொடர்ந்து குமுளியில் உள்ள அணை கண்காணிப்பு குழு அலுவலகத்தில் குழுவினரின் ஆலோசனை கூட்டமும் நடைபெறவுள்ளது. இதில் ஆய்வு தொடர்பான அறிக்கை ஒன்றிய நீர்வளத்துறை தலைமை கண்காணிப்பு குழுவிடம் சமர்பிக்கப்படவுள்ளது.